Monday, June 24, 2013

பராஅத் துஆ (பிரார்த்தனை)


பராஅத்  துஆ (பிரார்த்தனை)

அஷ்ஷைகுல்  காமில் குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய துஆ.

 

     யா அல்லாஹ்!   உன் பொருட்டாலும் இந்த பராஅத்தின் பொருட்டாலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டாலும், அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் பொருட்டாலும், ரஸூல்மார்கள் பொருட்டாலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் கலீபாக்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு), உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), அலீ (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் பொருட்டாலும், பதுறு ஸஹாபாக்கள் பொருட்டாலும், ஏனைய ஸஹாபாக்கள் பொருட்டாலும், பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பொருட்டாலும், ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், குதுபு நாயகம்  அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பொருட்டாலும், அவர்களுக்கு முன் வந்த - பின் வந்த  குதுபுமார்கள், வலீமார்கள் பொருட்டாலும், ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எமது பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எம் தந்தை நாயகம் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எம் முரீத்களுக்கும், எம் முரீத்களின் மனைவி மக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகள், தாய் தந்தையருக்கும், அவர்களுக்கு உதவியாகவுள்ள அண்ணன் தம்பிமார்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும், எம் மனைவி மக்கள், அவர்கள் பிள்ளைகள், அண்ணன்மார், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர், உதவியாளர்கள், பேரப்பிள்ளைகள் யாவருக்கும்.....


     யா அல்லாஹ்! நல்ல சந்தோஷ­ வாழ்வையும், நோயற்ற பூரண சுகத்தையும், கொடிய நோய்கள் நம்மை அணுகாமலும், ஆபத்து எம்மை அணுகாமலும், உடலிலே நல்ல சக்தியையும், எம் ஐம்புலன்களும் சிறப்புடன் செயற்படும் தன்மையையும் தந்தருள்வாயாக



     அல்லாஹ்வே! நம் அனைவருக்கும் நீடிய ஆயுளைக் கொடுப்பாயாக! கொடிய நோய்வாய்ப்பட்டுக் கஷ்டப்படுவோருக்குப் பூரண சுகத்தைக் கொடுத்தருள்வாயாக! பரக்கத்தையும் செழிப்பையும் துன்பமற்ற வாழ்வையும் துயரற்ற வாழ்வையும் கவலையற்ற வாழ்வையும் அல்லாஹ் நீ தந்தருள்வாயாக!

     நின்றிருக்கும் வியாபாரம் கடல்மடைபோல திறக்கப்பட்டு எங்கும் செழிப்பான வியாபாரம் நடந்து நம் பிள்ளைகளின் வாழ்வைச் செழிப்பாக்கி வைப்பாயாக, நம் பிள்ளைகள் செல்வச் செழிப்புடன் வாழ அருள்பாலிப்பாயாக! குடும்பங்கள் கோபம், பொறாமை முதலானவைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ அருள்பாலிப்பாயாக!


     நீதி, நியாயம், நேர்மை, உண்மை, மனவலிமை ஆகியவைகளை எமக்குத் தந்து மக்கள் மத்தியிலே எம்மை உயர்ந்தவர்களாக்குவாயாக!

     உன் உயர்வு மிக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரினும் மிக்கவர்களாக அன்பு கொண்டு  அவர்களை உயர்வுபடுத்திப் பேசும் சுகமான நாவையும் அவர்களை உயர்த்திப்பாடும் அழகான பாவையும் அவர்களின் உறுதியையும் உயர்ந்த ஈமானையும் தந்தருள்வாயாக! அவர்களுக்காக தம்மைத் தியாகஞ் செய்யும் உயர்ந்த பண்பையும் உடல் சக்தியையும் தந்தருள்வாயாக!

     யா அல்லாஹ்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்து அவர்களை இழிவுபடுத்தி அந்நியர் பணத்தில் வாழும் இஸ்லாத்திலுள்ள இஸ்லாத்தின் எதிரிகளைப் பிடுங்குவாயாக! இஸ்லாத்தின் பரிசுத்தத்தை மாசுபடுத்தி  அந்நியர் மத்தியில் இழிவுபடுத்தும் இஸ்லாமிய துரோகிகளைச் சித்திரவதைக்குள்ளாக்குவாயாக! கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு இழிவுற்று அழிந்து மடியச் செய்வாயாக!

     அல்லாஹ்வே உனக்காக உன் நபிக்காக, உன் ஊழியர்களுக்காக வாழ்ந்து வரும் உன் தியாகிகளுக்கு பூரண நல்வாழ்வும் நீடிய ஆயுளும் அளவற்ற சந்தோஷமும்  நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!

     ஆமீன் யாரப்பல் ஆலமீன்.  வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.          

 

 

ஏகத்துவ மெய்ஞான சபை - குவைத் கிளை.

புனித மிஃராஜில் அவ்ன் நாயகர் அருளிய அற்புத துஆ.


அகிலநாதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் புனித மிராஜில் அவ்ன் நாயகர் அருளிய அற்புத துஆ.

அல்லாஹ்வே! மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவரை, எம்பெருமானாரை நீ நடத்தினாயே, அவர்கள் பொருட்டால் எம்  அனைவருக்கும் தைரியத்தையும், உடல் சக்தியையும், மனோ நிம்மதியையும் தந்தருள்வாயாக.

அல்லாஹ்வே! எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) முதல் வானத்திற் சென்றபோது சிறப்பும் மேன்மையும் தங்கி நின்ற ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இருவர் பொருட்டாலும் சிறப்பையும், மேன்மையையும், நேர்மையையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக.

அல்லாஹ்வே! இரண்டாவது வானிலே ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கண்டார்கள், இவர்கள் இருவர் பொருட்டாலும் எமக்கு நிறைந்த ஈமானையும், பூரண தவ்ஹீத் ஞானத்தையும், உண்மைக்கு முரணானவர்களுடன் எதிர்த்துப் பேசி எதிரிகளை வெற்றி கொள்ளும் தன்மையையும் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) மூன்றாம் வானத்திலே யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள், இவர்கள் இருவர் பொருட்டாலும் மாட்சிமையையும், உடல் அழகையும், உள் அழகையும், நிறைந்த செல்வத்தையும், நோயற்ற வாழ்வையும், பாபமற்ற நற்கிரியைகளையும் எமக்குத் தந்து எமக்குச் சந்தோஷமான வாழ்வையும், நீடிய ஆயுளையும் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! நான்காம் வானத்திலே எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) இத்ரிஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள், இவர்கள் இருவர் பொருட்டாலும் தவ்ஹீதிலே எம் தரங்களை உயர்த்தி, உலக வாழ்விலே எம் தொழில்களில் உயர்ச்சியைத் தந்து, எம் தொழில்களில் நிறைந்த இலாபத்தையும், உணவில் விஸ்தீரணத்தையும் தந்து, எம் வாழ்வில் இன்பம் கொழிக்கச் செய்வாயாக!

அல்லாஹ்வே! ஐந்தாம் வானிலே எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள், இவர்கள் இருவர் பொருட்டாலும் எம் குடும்பம், எம் உடமைகள், எம்மைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும், அனைத்துப் பொருள்களுக்கும் பாதுகாப்பை என்றென்றும் அருள்வாயாக; எம் அனைவருக்கும் வெற்றி மேல் வெற்றியைத் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) ஆறாவது வானிலே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள், இவர்கள் இருவர் பொருட்டாலும் எம் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றியருள்வாயாக; துன்பம், துயர்களை நீக்கியருள்வாயாக, இறைவனை அறியும் பாக்கியத்தையும் எம்பெருமானாரின் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) ஸபாஅத்தையும் எமக்குத் தந்தருள்வாயாக; நாயகத்தின் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வாயாக; தவ்ஹீதைச் சேர்ந்த கூட்டத்தினருக்கு பெறுமதிப்பையும், பேரருளையும், பேருதவியையும் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) ஏழாவது வானிலே இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டார்கள், எனவே இவர்கள் இருவர் பொருட்டாலும் கொடிய நம்ரூதின் நெருப்பிலிருந்து இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் காப்பாற்றியது போல் எம் கொடிய நோய்களிலிருந்தும், கொடிய சத்ருக்களிலிருந்தும், அவர்கள் உண்டுபண்ணும் கொடுமையிலிருந்தும், மனக்குழப்பங்களிலிருந்தும், அழிவிலிருந்தும் எம்மைக் காப்பற்றி, எமக்குச் சந்தோஷ வாழ்வையும், நீடிய ஆயுளையும் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அதற்கு மேலும் சென்று அல்லாஹ்வை அறிவுக்கண்ணால் பூரணமாய்க் கண்டு இரண்டறக் கலந்து இன்பம் பெற்றார்களே அந்த இன்பத்தை எல்லாவற்றிலும் உன்னைக் கண்டு இலயிக்கும் இன்பத்தை எமக்குத் தந்தருள்வாயாக!

அல்லாஹ்வே! இந்த இடத்தில் உன் நபிக்காக நாம் பிரசன்னமாகியுள்ளோம், அவர்கள் பொருட்டால் எமக்குப் பேரின்பத்தை தந்தருள்வாயாக, இந்த ஊரையும் ஏனைய மற்ற ஊர்களையும் காப்பாற்றியருள்வாயாக, எம்பாவங்களை மன்னித்து எமக்குப் பூரண வெற்றியைத் தந்தருள்வாயாக, உன் எதிரிகள் எங்கிருந்தாலும் தோற்றோடவைப்பாயாக; கபடம், சூதற்ற உண்மையான வாழ்க்கையை எமக்குத் தந்தருள்வாயாக; உன்னில் கலந்து வாழும் வாழ்க்கையையே எம்வாழ்க்கையாக்குவாயாக. ஆமீன் .

 

ஏகத்துவ மெய்ஞான சபை - குவைத் கிளை.